உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா கடந்த இரண்டு வாரங்களில் இல்லாதளவுக்கு மிகக் கொடூரமான வான்வழித் தாக்குதலை இன்று (15) திங்கட்கிழமை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் உக்ரைனின் ஆன்மீக மற்றும் கலாச்சார வரலாற்றின் அடையாளமாகவும், யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னமாகவும் விளங்கும் புகழ்பெற்ற ‘கீவ் பெச்செர்ஸ்க் லாவ்ரா’ குகை மடாலயம் நேரடியாகத் தாக்கப்பட்டு பலத்த சேதமடைந்துள்ளதுடன், பெரும் தீப்பிழம்புகளால் சூழப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்றையதினம் அதிகாலை நடத்தப்பட்ட இந்த ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான தாக்குதல்களில் கீவ் நகரில் மட்டும் 4 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 23 பேர் காயமடைந்துள்ளனர் எனத் தலைநகரின் இராணுவ நிர்வாகத் தலைவர் திமூர் தகாச்சென்கோ தெரிவித்துள்ளார்.
மடாலயம் தீப்பற்றி எரிந்த வேளையில், பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள சுரங்கப்பாதைகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
ரஷ்யாவின் தாக்குதலில் பல அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் மின் இணைப்புகள் சேதமடைந்துள்ளன. இதனால் சுமார் 140,000 குடியிருப்பாளர்கள் மின்சாரமின்றி தவித்து வருகின்றனர்.
உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் மீது நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதலில் 5 அவசரக்கால மீட்புப் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். சுமி பிராந்தியத்திலும் ஒரு குழந்தை உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.
“எங்கள் மக்கள் மீதும் எங்களது பாரம்பரியத்தின் மீதும் நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல் இது. ரஷ்யாவின் ஆர்த்தடாக்ஸ் மத விழுமியங்களின் உண்மையான முகம் இதுதான்.” என உக்ரைன் பிரதமர் யூலியா ஸ்விரிடென்கோ விசனம் தெரிவித்துள்ளார்.
மறுபுறம், ரஷ்யாவின் வருமானம் ஆதாரங்களை முடக்குவதற்காக உக்ரைனும் ரஷ்யாவின் தொழில்துறை மற்றும் எரிசக்தி நிலையங்களைக் குறிவைத்துத் தனது ட்ரோன் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.
திங்கட்கிழமை அதிகாலை மொஸ்கோவிற்கு தெற்கே உள்ள தொழில் நகரமான துலா மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில், ஒரு வயது குழந்தை உட்பட மூவர் காயமடைந்ததுடன் 3 பேர் பலியாகியுள்ளனர் என பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார். மாஸ்கோ நகருக்குள்ளும் பல ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன.
இந்தக் கடுமையான வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து, உக்ரைனின் அண்டை நாடும் நேட்டோ அமைப்பின் உறுப்பினருமான போலந்து, தனது வான்பரப்பிற்குள் ரஷ்ய ஏவுகணைகள் நுழைவதைத் தடுப்பதற்காக அவசரமாகத் தனது போர் விமானங்களை வானில் பறக்கவிட்டுப் பாதுகாப்பை பலப்படுத்தியது. எனினும், எவ்வித வான்பரப்பு மீறல்களும் பதிவாகவில்லை எனப் போலந்து இராணுவம் பின்னர் அறிவித்தது.
இந்தத் கொடூரத் தாக்குதலுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக, ஞாயிற்றுக்கிழமையன்று உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் 4 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்துத் தொலைபேசியில் விரிவாகக் கலந்துரையாடினார்.
இந்த வாரம் பிரான்சில் நடைபெறவுள்ள ஜி7 உச்சிமாநாட்டிற்கு முன்னதாக இந்த விவாதம் நடந்துள்ளது. ஜெலென்ஸ்கி முன்னதாக ரஷ்ய அதிபர் புடினுடன் நேரடிப் பேச்சுவார்த்தைக்கு முற்பட்ட போதிலும் புடின் அதனை நிராகரித்திருந்தார்.
இந்நிலையில், உக்ரைன் மோதலை முடிவுக்குக் கொண்டு வருவது மிக முக்கியமானது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ரஷ்ய ஜனாதிபதி புட்டினிடமும் தெரிவித்துள்ளதாக கிரெம்ளின் மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.
மத்திய கிழக்கில் அமெரிக்கா – ஈரான் இடையேயான அமைதி ஒப்பந்தம் வரும் வெள்ளிக்கிழமை சுவிட்சர்லாந்தில் கையெழுத்தாகவுள்ள நிலையில், உலக நாடுகளின் கவனம் தற்போது உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தையை நோக்கித் திரும்பியுள்ளது.






