இனந்தெரியாத குழுவினரால் வான்படை சிப்பாய் ஒருவர் கடத்தப்பட்டு தாக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் இலங்கை விமானப்படை தெளிவுபடுத்தியுள்ளது.
மட்டக்களப்பு வான்படை தளத்தில் கடமையாற்றும் கோப்ரல் ஒருவர் நேற்று (28) காலை வாழைச்சேனை, ரிதிதென்ன பிரதேசத்தில் மரத்தில் கட்டப்பட்டு காணப்பட்ட நிலையில், பிரதேசவாசிகள் வாழைச்சேனை காவல்துறையினருக்கு அறிவித்ததையடுத்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இது தொடர்பில், வான்படை வெளியிட்டுள்ள அறிவிப்பில், அந்த இடத்தில் தமிழில் எழுதப்பட்ட பலகை ஒன்றும் காணப்பட்டதாகவும், “முரட்டு அரசியலுக்கு உதவும் கைக்கூலிகள் இப்படித்தான் கொல்லப்படுகிறார்” என்ற வசனம் எழுதப்பட்ட அட்டையொன்றும் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வாழைச்சேனை காவல்துறையினர் தாக்குதலுக்கு இலக்கான வான்படை சிப்பாயிடம் விசாரித்துள்ளனர்.
அதில், விடுமுறைக்கு சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்த தன்னை வேனில் கடத்திச் சென்று சிலர் மரத்தில் கட்டி வைத்து அடித்துக் கொல்ல முற்பட்டதாக தெரிவித்துள்ளார்.
எனினும், அவர் தெரிவித்த தகவலிலும், விசாரணையில் வெளியான தகவல்களிலும் உள்ள முரண்பாடுகளாலும், அவருக்கு அடுத்ததாக தமிழில் எழுதப்பட்டு காணப்பட்ட அட்டை குறித்தும் காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
இதுகுறித்து விசாரணை நடத்திய காவல்துறை அதிகாரிகள், முழுமையான தமிழ்மொழியறிவு இல்லாத ஒருவரால் இந்த வாசகம் எழுதப்பட்டிருப்பதை கண்டறிந்தனர்.
மேலும் விசாரணையை தொடர்ந்த போது, இந்த செயலை குறித்த வான்படை சிப்பாயே செய்ததாக ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளார்.
இந்த வான்படை கோப்ரல் கணினி இணைய விளையாட்டுகளுக்கு அதிகளவில் அடிமையாகி இருப்பதாகவும், அதில் ஈடுபடுவதற்காக தனது தளத்தில் உள்ள சக வான்படை வீரர்களிடம் பணம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பணத்தை திருப்பித் தரமுடியாமல் போனதால் தனது உயிரை மாய்த்துக்கொள்ள எண்ணியதாக அவர் அளித்த வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் தான் உயிரை மாய்த்துக் கொண்டால், தனது இறப்பின் பின்னர் தன் மனைவிக்கு கிடைக்க வேண்டிய கொடுப்பனவு கிடைக்காமல் போய்விடும் என்பதற்காகவே இந்த செயலை திட்டமிட்டதாக தெரிவித்துள்ளார்.
தற்போது வாழைச்சேனை காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட கோப்ரல் இன்று (29) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
இந்த நடவடிக்கையுடன் இலங்கை வான்படை அல்லது வேறு எந்த தரப்பினருக்கும் எந்த தொடர்பும் இல்லை, இந்த முழு செயல்முறையும் இந்த கோப்ரல் தனது விருப்பத்திற்கு ஏற்ப மேற்கொண்டதாக வான்படை வலியுறுத்தியுள்ளது.
இலங்கை வான்படையின் நற்பெயருக்கு ஏற்படுத்திய கலங்கத்துக்கான, காவல்துறை விசாரணையின் முடிவில், விமானப்படை சட்டத்தின்படி குறித்த கோப்ரலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அந்த அறிக்கையில் வான்படை மேலும் தெரிவித்துள்ளது.
- புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
- இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
- யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com