வரி செலுத்துநர் அடையாள இலக்கமானது ஜூன் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் கட்டாயமாகப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் எனத் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதால், பொதுமக்கள் தேவையற்ற பீதியடையத் தேவையில்லை என யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியிலுள்ள உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகத்திற்கு முன்னால் பொதுமக்கள் தினமும் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருப்பதை அவதானித்த அரசாங்க அதிபர், இது குறித்துப் பிராந்திய ஆணையாளருடன் அவசரமாகக் கலந்துரையாடிப் பின்வரும் முக்கிய விளக்கங்களை வழங்கியுள்ளார்.

பொதுமக்களுக்கான 5 முக்கிய அறிவுறுத்தல்கள்:
காலக்கெடு குறித்த விளக்கம்: வரி செலுத்துநர் அடையாள இலக்கத்தைப் பெற்றுக்கொள்வதற்கு ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை மட்டுமே காலக்கெடு இருப்பதாகப் பரப்பப்படும் தகவலில் எவ்வித உண்மையும் இல்லை. இவ்வாறான எவ்வித காலவரையறையும் இதுவரை அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்படவில்லை.
கட்டணம் அறவிடப்பட மாட்டாது: இந்த அடையாள இலக்கத்தைப் பெற்றுக்கொள்வதற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் எவ்விதக் கட்டணமும் அறவிடப்பட மாட்டாது. இச்சேவை முற்றிலும் இலவசமானது. எனவே, எவருக்கும் கட்டணம் செலுத்துவதோ அல்லது இடைத்தரகர்களிடம் பணம் கொடுத்துச் சான்றிதழ் பெற்றுக் கொள்வதோ தண்டனைக்குரிய குற்றமாகும்.
ஏற்கனவே பதிவு செய்தவர்கள்: ஏற்கனவே வரி செலுத்துநர் அடையாள இலக்கம் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பின், சம்பந்தப்பட்ட நபர் தனது தேசிய அடையாள அட்டையை மட்டும் காண்பித்து வரி செலுத்துநர் அடையாள இலக்கச் சான்றிதழை இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
இணையவழி விண்ணப்பம்: அடையாள இலக்கம் இதுவரை பதிவு செய்யப்படாதவர்கள், நிகழ்நிலை முறைமை (Online) மூலமாக www.ird.gov.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்றோ அல்லது உரிய விண்ணப்பப் படிவங்களைப் பூர்த்தி செய்து சமர்ப்பித்தோ பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு பதிவுகளை மேற்கொள்பவர்களுக்கான சான்றிதழ்கள் தபால் மூலம் அவர்களின் விலாசத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.
மேலதிக விபரங்கள்: இது தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு 0212217333 என்ற தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்பு கொண்டு நேரடியாகக் கேட்டு அறிய முடியும்.
எனவே, இந்த விடயத்தில் பொதுமக்கள் எவ்வித அச்சமோ அல்லது பீதியோ அடையத் தேவையில்லை எனவும், நீண்ட வரிசையில் நின்று சிரமப்படுவதைத் தவிர்க்குமாறும் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் பொதுமக்களிடம் பணிவாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.





