இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் கூட்டிணைவதற்காக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி முன்வைத்திருந்த ஆறு நிபந்தனைகளில் இணைந்த கட்டமைப்பு ஒன்றின் அடிப்படையாக, சுருக்கமான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்தப்படுதல் உட்பட மூன்று நிபந்தனை முதற்கட்டமாக ஏற்றுச்செயற்படுவதற்கு தயார் என்று தமிழரசுக்கட்சி அறிவித்துள்ளது.
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தினால் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் செயலாளர் நா.இரத்தினலிங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில் ‘தங்களது 12-05-2026 ஆம் திகதிய கடிதத்துடன் இணைத்து அனுப்பப்பட்ட பரிந்துரைகள், எமது கட்சியின் 17-05-2026 ஆம் திகதிய மத்திய செயற்குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்டு, முதல் மூன்று பரிந்துரைகளின் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கலாம் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, உத்தேச புரிந்துணர்வு உடன்படிக்கை வரைவு ஒன்றினை எமது பரிசீலனைக்காக வழங்கி உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, இலங்கைத் தமிழரசுக்கட்சியுடன் கூட்டிணைவதாக இருந்தால் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றும் குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கையானது ஆறு பிரதான நிபந்தனைகளின் கீழ் அமைய வேண்டுமென்றும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் செயலாளர் இரத்தினலிங்கத்தினால் 12-05-2026ஆம் திகதியன்று கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
குறித்த கடித்தில்,
இணைந்த கட்டமைப்பு ஒன்றின் அடிப்படையாக, சுருக்கமான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்தப்படுதல்.
புரிந்துணர்வு உடன்படிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டால், பொதுவான மையக் கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்படுதல். அதாவது தற்போதுள்ள உயர் அங்கத்தை மேலும் வலுப்படுத்துதல்.
அவ்வுயர் அங்கம் தற்போது ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி கொண்டுள்ளதைப் போலவோ அல்லது இலங்கதை; தமிழரசுக்கட்சியின் தரப்பு பரிந்துரை செய்யும் ஒன்றாகவோ அமைதல். எதிர்காலத்தில் வேறு அமைப்புகளும் இணைந்து கொள்ளக்கூடிய வகையில் அவ்வுயர் அங்கம் அமைதல். இறுதி வடிவத்தை இருதரப்பும் பேசி முடிவு செய்தல்.
இணைந்த கட்டமைப்புக்கு ஒரு பொதுப்பெயர் சூட்டுதல். அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றோ அல்லது வேறொரு புதிய பெயராக இருக்கலாம்.
மேலே உள்ள விடயங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் இக் கட்டமைப்பை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தலும், பொதுச் சின்னம் ஒன்றைப் பெற்றுக் கொள்ளுதலும்.
இவை அனைத்தும் இருதரப்பாலும் ஏற்றுக் கொள்ளப்படும் பட்சத்தில், இரு தரப்பினதும் பிரதிநிதிகள் இணைந்து விரிவான ஒரு கட்டமைப்பு பற்றி முழுமையான ஒரு அறிக்கையை தயாரித்தல்
ஆகிய விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மீண்டும் கஜேந்திரகுமார் vs அர்ச்சுனா மோதல்





