யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் இன்றையதினம்(02) 3.5 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 29 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் போதைப்பொருள் தடுப்பு காவல்துறையினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
விசாரணைகளின் பின்னர், சந்தேகநபரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்றைய தினம் (01) குறித்த கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் போதைத்தடுப்பு காவல்துறை பிரிவின் விசேட நடவடிக்கையின் போது, குருநகர், மணியந்தோட்டம், அரசடி ஆகிய பகுதிகளை சேர்ந்த ஐந்து இளைஞர்கள் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஹெரோயின் போதைப்பொருட்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
இந்தநிலையில் ஐவரிடமும் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ள நிலையில் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதேவேளை மணல் கொண்டு செல்வதற்காக வழங்கப்பட்ட அனுமதியின் நிபந்தனைகளை மீறி மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் வாகனத்தினை யாழ்ப்பாணம் காவல்துறையினர் மடக்கி பிடித்து சாரதியை கைது செய்துள்ளனர்.
அரசடி வீதி ஊடாக மணல் மண்ணுடன் சென்ற டிப்பர் வாகனம் ஒன்றினை காவல்துறையினர் சோதனை செய்த வேளை, அனுமதிப்பத்திர நிபந்தனையை மீறி வாகனத்தில் மணலை ஏற்றி சென்றமை தெரியவந்துள்ளது.
அதனை அடுத்து சாரதியை கைது செய்த காவல்துறையினர், டிப்பர் வாகனத்தையும் மணலுடன் மீட்டு காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட நபரை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





