யாழ் வல்வெட்டித்துறை பகுதியில் விடுதலைப்புலிகளின் வெடிகுண்டு என சந்தேகிக்கப்படும் குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் (Bandaranaike International Airport) வைத்து நேற்று பயங்கரவாத தடுப்பு பிரிவினர் இவர்களை கைது செய்துள்ளனர்.
வல்வெட்டித்துறை பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர், வெடிகுண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
அது தொடர்பில் வல்வெட்டித்துறை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் குறித்த வெடிகுண்டினை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் மூவரை கைது செய்தவற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அந்நிலையில் சந்தேகநபர்கள் மூவரும், கடல் வழியாக இந்தியாவுக்கு தப்பி சென்ற நிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன்னர், இந்தியாவில் தங்கி நிற்பதற்கான ஆவணங்கள், விசா என்பவை இல்லாத நிலையில், இந்திய காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை விசாரணைகளின் பின்னர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தினர்.
அந்நிலையில் குறித்த மூவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய வேளை மூவரையும் விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களை தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.





