பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு, இலங்கையின் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நீண்டகாலமாக நிலவும் நிலப் பிரச்சினைகளைத் தீர்க்க ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா.) ஒரு புதிய திட்டத்தைத் தொடங்க உள்ளது.
இதன்படி ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செய்தியில் இதனை கூறியுள்ளார்.
“விவசாய அமைச்சகத்தின் கீழ் உள்ள அரசு நிறுவனங்களுடன் நாங்கள் உற்பத்தி ரீதியான கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளோம். அவற்றை இறுதி செய்து வருகிறோம், அடுத்த சில மாதங்களில் இந்தத் திட்டத்தைத் தொடங்குவோம் என்று நம்புகிறோம்,” என்று ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போரின் போதும் அதற்குப் பின்னரும் இந்த இரண்டு மாகாணங்களிலும் மீள்குடியேற்றம் மற்றும் வாழ்வாதாரத் திட்டங்களில் ஐக்கிய நாடுகள் சபையின் நீண்டகால ஈடுபாட்டைக் கருத்தில் கொண்டு, சேதமடைந்த நில ஆவணங்கள், இடம்பெயர்வு, உரிமையாளர்களின் மரணம் மற்றும் அகதிகள் திரும்புதல் ஆகியவற்றால் எழும் நிலப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அரசாங்கத்திற்கு உதவ அவர்கள் முன்வந்துள்ளனர்.
இது தொடர்பாக ஐ.நா. அலுவலகம் முந்தைய அரசாங்கத்துடன் கலந்துரையாடல்களை நடத்தியது. அந்த கலந்துரையாடல்களின் விளைவாக, முந்தைய அரசாங்கம் ‘பாரம்பரிய’ நில உறுதிகளை விநியோகிக்கும் திட்டத்தைத் தொடங்கியது எனவும் மார்க்-ஆண்ட்ரே விளக்கியுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் இந்த திட்டத்திற்கு ‘ஹிமிகாமா’ என்று பெயரிட்டு கடுமையான நிபந்தனைகளின் கீழ் நில உறுதிகளை விநியோகிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
“இந்த இரண்டு மாகாணங்களிலும் நில சீர்திருத்த செயல்பாட்டில், ஐ.நா. அலுவலகம் நில உரிமைச் சான்றிதழ்களை வழங்குவதிலும், தனியார் நிலங்களை வர்த்தமானியில் இருந்து நீக்குவதிலும் அரசாங்கத்திற்கு உதவ செயல்படும்” என்று . ஃபிரான்ச் கூறியுள்ளார்.
3 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான இந்த திட்டம் இரண்டு மாகாணங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் இரண்டு வருட காலப்பகுதியில் செயல்படுத்தப்பட உள்ளது.
அரசாங்கம் நான்கு சதவீத நிலங்களை வர்த்தமானியில் இருந்து நீக்குவதற்கு கொள்கையளவில் ஒப்புக் கொண்டுள்ளது.
மேலும் வனவிலங்குத் துறை மற்றும் வனப் பாதுகாப்புத் துறையின் கீழ் உள்ள நிலங்களை வர்த்தமானியில் இருந்து நீக்குவதற்கும் ஐக்கிய நாடுகள் சபை உதவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.





