தேசிய மக்கள் சக்திக்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையே பெரும் அமளிதுமளி!

மட்டக்களப்பு மாநகர சபை அமர்வில் தமிழரசு கட்சி உறுப்பினர்களுக்கும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கு இடையே பெரும் அமளிதுளி இடம்பெற்றுள்ளது.

நடந்து முடிந்த ஹர்தாலின் போது மாநகரசபை முதல்வரை தேசிய மக்கள் சக்தி சில மாநகர சபை உறுப்பினர்கள் திட்டமிட்டு அவமானப்படுத்தியதாக மாநகர சபை அமர்வில் கொண்டு வந்ததையடுத்து இரண்டு தரப்பினரிடையேயும் குறித்த பதற்றம் ஏற்பட்டுள்ளது.

மாநகரசபையின் 3 வது மாதாந்த அமர்வு இன்று வியாழக்கிழமை (21) மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் இடம்பெற்றது.

தன்போது கடந்த 18 ம் திகதி வடக்கு கிழக்கில் இடம்பெற்ற ஹர்த்தால் போது மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் கடைகளை பூட்டுமாறு ஊடகங்களில் வெளிவந்த செய்தி உண்மையா அல்லது திரிவுபடுத்தப்பட்டதா என மக்களுக்கு உண்மையை கூறுமாறு முதல்வரிடம் உறுப்பினர் துரைசிங்கம் மதன் கோரிக்கை விடுத்தார்.

இதனைதொடர்ந்து முதல்வர், “அன்றைய தினம் நான் வீட்டில் இருந்து மாநகரசபைக்கு செல்லும் போது நகரில் சில கடைகள் திறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து செல்லும் பாதையில் அங்கு சென்றேன்.

அப்போது அந்த பகுதியில் தேசிய மக்கள் சக்தி மாநகரசபை உறுப்பினர்கள் சிலர் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் நிற்பதை கண்டு வாகனத்தை விட்டு இறங்கி தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் ஒருவருடன் ஹர்த்தால் செய்வதன் நோக்கத்தை தெரிவித்தேன்.

அப்போது அங்கு இருந்த தேசிய மக்கள் சக்தி மாநகர சபை உறுப்பினர் சிலர் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் என்னை சட்டவிரோதமாக வாகனத்தை பயன்படுத்தியதாகவும் கடைகளை பூட்டா விட்டால் அனுமதி பத்திரத்தை ரத்து செய்வதாகவும் அவர்களே பேசினர். நான் அப்போது ஒன்றும் பேசவில்லை.

அவர்களே வர்த்தகர்கள் எனக்கு பேசியது போல காணொளி எடுத்து ஊடகங்களுக்கு அனுப்பி உள்ளதுடன் எனக்கு எதிராக காவல் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்த நிலையில் அங்கு சென்று விசாரணையின் பின்னர் இருவரும் சமாதானமாக செல்வதாக தெரிவித்து அதை முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

இந்த நிலையில், நான் கடைய மூடு மாறும் அல்லது அனுமதி பத்திரம் இரத்து செய்தவாக வர்த்தகர்களிடம் தெரிவித்ததாக செய்யாத ஒன்றை செய்ததாக எனக்கு அவமானம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.” என்றார்.

இதன்போது முதல்வரை திட்டமிட்டு தேசிய மக்கள் சக்தியின் அவமானப்படுத்துவதாக பிரதி முதல்வர் வைரமுத்து தினேஷ்குமார் மற்றும் உறுப்பினர் கருணாநிதி ஜனகன் தெரிவித்து உண்மையில் மனசாட்சிபடி கேள்விக்கு பதில் அளிக்குமாறும் அன்றைய தினம் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் காலையில் காந்தி பூங்காவில் ஒன்று கூடி நின்றதுடன் பூட்டிய கடைகளின் வர்த்தகர்களின் தொலைபேசி ஊடாக கடையை திறக்குமாறு கோரினர் என்றனர்.

பின்னர் அதற்கு பதில் அளித்த தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் ஜோன்சன், “நான்ஹர்த்தாலுக்கு 3 தினங்களுக்கு முன்னர் முதல்வர் கடைகளுக்கு சென்று பூட்டுமாறு கோரியதாக கேள்வியுற்றேன்.

தற்போதைய சூழ்நிலையில் ஏன் இந்த ஹர்த்தால் வடக்கிலே பல்கலைக்கழகம், வர்த்தக சங்கங்கள் உட்பட மக்கள் எந்த விதமான ஆதரவும் உங்களுக்கு வழங்கவில்லை.

மக்கள் சுமந்திரனுக்கு போடுகின்ற ஹர்த்தாலா என கேட்டனர். எனவே இப்போது செம்மணி தொடக்கம் எல்லாம் ஆராயப்பட வேண்டும் என தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதை செய்யுமாறு தெரிவித்தனர், செய்ய வேண்டாம் என தெரிவிக்கவில்லை எனவே இந்த நாட்டிலே எந்தவொரு அரசாங்கத்திடமும் இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததா? இல்லை? ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தான் அந்த சந்தர்பத்தை வழங்கியுள்ளது.

அத்துடன், சர்வதேச விசாரணைக்கு தொடர்புபடுத்துவது இந்த அரசாங்கம் தான். எனவே அச்சம் கொள்ள வேண்டாம்” என்றார்.

அப்போது குறுக்கிட்ட சுயேச்சைக் குழு உறுப்பினர் சத்தியசீலன் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்குமாறு கோரினார்.

இதன்போது, தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் பிரேமானந்தன், “இது நடந்தது; எனக்கு தெரியாது இருந்தபோதும் அதற்கு முதல் முதல்வர் என்ற ரீதியில் ஹர்த்தால் வைக்கலாமா?

ஜனநாயக ரீதியாக நாங்களும் உறுப்பினர்கள் இருக்கிறோம், அப்போது கூட்டம் போட்டு எமது கருத்தை எடுக்க வேண்டும் அது செய்யப்படவில்லை எல்லாம் அரசியல் ஆக்கப்படுகின்றது எப்படி ஒரு முதல்வர் சென்றவர் என சட்டத்தரணிகள் உட்பட புத்திஜீவிகள் கேள்வி கேட்டனர்.” என்றார்.

அதனைதொடர்ந்து, தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் உதயன், “இந்த ஹர்த்தால் போதைப்பொருளுடன் தொடர்புடைய ஒருவர் இராணுவ முகாமிற்கு சென்று இடம்பெற்ற சம்பவம், எனவே இது தேவையற்ற ஹர்த்தால்” என்றார்.

இதனையடுத்து தமிழரசு கட்சி உறுப்பினர்கள், “கடந்த காலத்தில் ஹர்த்தாலின் போது இராணுவம், காவல்துறையினர் கடையை திறக்குமாறு பணிப்பார்கள் ஆனால் தற்போது தேசிய மக்கள் சக்தி அதை செய்கின்றனர்” என வாதிட்டனர்.

இதனையடுத்து அதற்கு பதிலாக தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் எஸ். றொபோட், “159 பாராளுமன்ற உறுப்பினருடன் ஜனாதிபதி நாட்டை ஆட்சி செய்கின்றனர் எனவே வார்த்தைகளை கவனமாக வெளியிட வேண்டும்” என தெரிவித்தார்.

இதன்காரணமாக தமிழரசு கட்சி உறுப்பினர்களுக்கும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களும் எழுந்து நின்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட இதையடுத்து அங்கு பெரும் அமளி துமளி சுமார் அரை மணித்தியாலம் நீடித்தது.

இதனையடுத்து முதல்வர் சபை உறுப்பினர்களை அமருமாறு கோரி நடந்தது முடிந்தது என தெரிவித்து சபை அமர்வை முடிவுக்கு கொண்டுவந்தார்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்