முல்லைத்தீவு பகுதியில் இராணுவத்தினரால் கொல்லப்பட்ட இளைஞன், அர்ச்சுனாவுக்கு உண்மை தெரியுமாம்!

முல்லைத்தீவு, முத்தையன்கட்டு இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ சிப்பாயின் கூட்டுத் திட்டத்தில் தகரங்களை களவாடவே ஐவரும் முகாமுக்குள் உள்நுழைந்தமையே உண்மையான சம்பவமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இராணுவ முகாம் அகற்றப்பட்டுள்ளதால் அங்கு எஞ்சியுள்ள தகரங்களை எடுத்து தருவதாகவும் தனக்கும் ஒரு பங்கு தேவை என்று கூறிய சிப்பாய், அப்பகுதியில் வசிக்கும் ஐவருடன் பகல் வேளையில் ஒன்றாக கூடி மது அருந்தியுள்ளார்.

இதனையடுத்து, அவர்களை இரவு வரும்படி கூறியுள்ளார். அச்சந்தர்ப்பத்தில் குறித்த சிப்பாய் நித்திரையில் இருந்துள்ளார்.

உள்ளே நுழைந்த ஐவரையும் கண்ட இராணுவத்தினர் அவர்களை துரத்தியுள்ளனர். அப்போது இவர்கள் தப்பியோடியுள்ளனர். அதில் ஒருவர் பிடிபட்ட நிலையில் இராணுவத்தினர் அவரை தாக்கியுள்ளனர்.

பின்னர் தப்பியோடியவர்கள் இராணுவம் விரட்டியதாகத பொய் கூறியதோடு ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவரை காணவில்லை என தெரிவிக்க பொது மக்கள் அன்றிரவு முழுவதும் தேடியுள்ளனர்.

அதன் பின்னர் இராணுவம் மக்களை இந்த பக்கம் வரவேண்டாம் என பயமுறுத்தியுள்ளனர். அடுத்த நாளே சடலம் முத்தையன்கட்டு குளத்தில் மிதந்துள்ளது. அங்கிருந்து சிலர் எனக்கு சம்பவம் தொடர்பில் முழு விபரத்தையும் தெரிவித்தனர்.

நான் குறித்த இடத்துக்கு செல்வதற்கு முன்னரே சுமந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அங்கு சென்று மக்களை திசைத் திருப்பும் விதத்தில் கதைத்து சம்பவத்தை பூதாகரமாக்கியுள்ளனர்.

இதில் திருட்டுச் சம்பவம் மற்றும் போதைப் பொருள், இராணுவம் தாக்கியதாக மூன்று முரண்பட்ட சம்பவங்கள் இருக்கின்றன. பொலிஸார் இராணுவத்தினர் ஐவரை பிடித்து விசாரிப்பதால் அதற்கு தடையிருக்கும் என நினைத்து நான் போகவில்லை.

ஏனைய உறுப்பினர்கள் அங்கு சென்றிருந்தனர். சுமந்திரன் கடந்த தேர்தலில் தோல்வியடைந்து பலாத்காரமாக தமிழரசுக் கட்சியின் செயலாளராகியவர். கட்சியினரிடம் கலந்துரையாடாமல் வெள்ளிக்கிழமை கடையடைப்பு என்றார். ஆனால் மன்னார் மடுதிருவிழா என்பதால் மக்கள் விரும்பவில்லை.

அதனால் இன்று முழுநாள் கடையடைப்பு என்று சுமந்திரன் மற்றும் சாணக்கியன் அறிவித்தனர். ஆனால் மக்கள் விரும்பவில்லை. நல்லூர் திருவிழாவும் நடைபெறுவதால் மக்கள் அவர்களை திட்டினர். இச்சம்பவத்தில் பொலிஸார் சிறந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

காலை ஆறு மணியிலிருந்து ஒன்பது மணிக்கு கடைகள் மூடியே இருக்கும். வடக்கில் எல்லா கடைகளும் திறந்திருந்தன. இது மக்களின் கடையடைப்பு அல்ல. சுமந்திரன் – சாணக்கியன் கோரியதாகும். வடக்கு மக்களுக்கு மீண்டும் பிரச்சினைகளுக்கு செல்வதற்கான எந்த விருப்பமும் இல்லை. இது தோல்வியை சரி செய்வதற்காக திட்டமிடப்பட்டதாகும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்