குருணாகல்- யக்கஹபிட்டிய சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரை, சம்பவத்துடன் தொடர்புடைய சிரேஷ்ட இராணுவ அதிகாரி அனைத்து கடமைகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே வழங்கிய அறிவுறுத்தலின் அடிப்படையில், யக்கஹபிட்டிய எரிபொருள் நிரப்பு நிலைய சம்பவம் தொடர்பான ஆரம்ப விசாரணை ஆயத்தின் பரிந்துரைகள் கிடைக்கும் வரையில், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குறித்த அதிகாரி சகல கடமைகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில், இராணுவத்தின் காவல்துறை பிரிவினரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று (4) இச்சம்பவம் தொடர்பில் கண்டறிந்து அதற்கேற்ப பரிந்துரைகளை வழங்குவதற்காக இராணுவத் தளபதியின் உத்தரவின் பேரில் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தைச் சேர்ந்த பிரிகேடியர் ஜெனரல் தலைமையில், ஐந்து பேர் கொண்ட ஆரம்ப விசாரணை ஆயம் நியமிக்கப்பட்டது.
குருணாகல், யக்கஹபிட்டிய ஐ.ஓ.சி. எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வைத்து, இளைஞர் ஒருவர் இராணுவ சிப்பாய்களால் பிடிக்கப்பட்டிருந்த நிலையில், இராணுவ லெப்டினன்ட் கேர்ணல் தர அதிகாரி ஒருவர் அவரை காலால் உதைக்கும் காணொளியொன்று சமூக வலைத் தளங்களில் வெளியாகியிருந்தது.
இந் நிலையில் குறித்த இராணுவ அதிகாரி தொடர்பில் இராணுவ மட்டத்திலான உடன் விசாரணைகளை ஆரம்பிக்கப்பட்டன.
- புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
- இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
- யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com





