நாட்டில் கடந்த இரண்டு நாட்களில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் 5 பேர் பலியானதுடன் நால்வர் காயமடைந்துள்ளனர்.
இதனடிப்படையில் அண்மைய துப்பாக்கி சூடு நேற்று (27) இரவு இரத்மலானை –சில்வா மாவத்தை பகுதியில் நடத்தப்பட்டது.
ஆயுதங்களுடன் வீட்டுக்குள் நுழைந்த இருவர் முச்சக்கரவண்டி சாரதி மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
சம்பவத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 30 வயதான ஒருவரே உயிரிழந்தார்.
எதற்காக இவ்வாறு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது என்பது தொடர்பில் இதுவரையில் தகவல் வெளியாகவில்லை.
இதேவேளை, அம்பலாங்கொடை – கலகொட பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் பலியாகினர்.
உந்துருளியில் வந்த இருவரால் இவ்வாறு துப்பாக்கி பிரயோகத்தை நடத்தி தப்பிச் சென்றுள்ளனர்.
துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு மற்றுமொருவர் பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.
இதேவேளை, அம்பலாங்கொட – ஊரவத்த பகுதியில் நேற்று முன்தினம் (26) உந்துருளியில் வந்த இருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பாதாள உலக குழு உறுப்பினர் ஒருவர் உயிரிழந்தார்.
குறித்த நபர் பலப்பிட்டிய மேல்நீதிமன்றில் வழக்கொன்றுக்காக முன்னிலையாகி மீள வீடு திரும்பிய சந்தர்ப்பத்தில் இவ்வாறு கொல்லப்பட்டார்.
இந்தநிலையில் குறித்த துப்பாக்கி சூட்டுக்கும் நேற்றைய துப்பாக்கி சூட்டுக்கும் தொடர்பு உள்ளதா? என்ற அடிப்படையில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, கம்பஹா நீதிமன்றுக்கு முன்பாக நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பாதாள உலக குழு உறுப்பினரான ‘பஸ் பொட்டா’ எனப்படும் சமன் ரோஹித பெரேரா உயிரிழந்தார்.
கம்பஹா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கம்பஹா நீதிமன்றுக்கு முன்பாக நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் பாதாள உலக குழுவின் உறுப்பினரான ‘பஸ் பொட்டா’ என்ற சமன் ரோஹித பெரேரா உள்ளிட்ட நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
நேற்று மதியம் கொலை சம்பவம் ஒன்று தொடர்பில் நீதிமன்றில் முன்னிலையாகி குறித்த நால்வரும் கெப் ரக வாகனம் ஒன்றில் திரும்பிச் செல்ல முற்பட்ட போது இவ்வாறு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
- புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
- இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
- யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com