கோட்டா நாடு திரும்புவதற்கு சரியான நேரம் இதுவல்ல, ரணில்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கைக்கு திரும்புவதற்கு இது சரியான நேரம் அல்லவென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றுக்கு நேற்று (31) அளித்த செவ்வியில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி, பொருளாதார வீழ்ச்சி, காரணமாக நாட்டில் இருந்து வெளியேறினார்.

அவர் தற்போது திரும்பினால், அவரை, வெளியேற்றுவதற்காக அணிதிரண்ட பல்லாயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் மத்தியில் மீண்டும் எதிர்ப்பலைகளை தூண்டக்கூடும் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.

இலங்கையின் ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ, மக்களின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில், கடந்த ஜூலை 13 அன்று, வான்படை விமானத்தில் நாட்டை விட்டு மாலைத்தீவுக்கு வெளியேறி, பின்னர் அங்கிருந்து சிங்கப்பூர் சென்று, தமது பதவி விலகலை அறிவித்தார்.

இந்தநிலையில், அவர் மீண்டும் நாடு திரும்பவுள்ளதாக உறுதிபடுத்தப்படாத தகவல்கள் வெளியாகியிருந்தன. இதனிடையே அவருடைய குறுங்கால பயண அனுமதியை மேலும் 14 நாட்களால் (ஆகஸ்ட் 11 வரை) நீடித்து சிங்கப்பூர் அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

எவ்வாறாயினும், கடந்த வார அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், கோட்டாபய ராஜபக்ஷ தலைமறைவாகவில்லை என்றும், அவர் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இந்தநிலையிலேயே அவர் திரும்பி வருவதற்கான உகந்த நேரம் இதுவென தாம் நம்பவில்லை என்று தி வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலுக்கு நேற்று அளித்த செவ்வியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

“நாங்கள் ஏற்கனவே அடிமட்டத்தை அடைந்துவிட்டோம் என்று நான் நினைக்கிறேன். நான் சுரங்கப்பாதையின் முடிவில் ஒளியைக் காண்கிறேன்.

நாம் முடிந்தளவு விரைவாக அதை அடைய முயற்சிக்கிறோம்” என்றும் ரணில் தெரிவித்துள்ளார். இலங்கை சுமார் 12 பில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதை இடைநிறுத்தியது.

அத்துடன் 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் கிட்டத்தட்ட 21 பில்லியன் டொலரை செலுத்த வேண்டியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர் மட்ட உடன்பாடு ஆகஸ்ட் மாத இறுதிக்குள் எட்டப்படும் என்று எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

எரிபொருள், உணவு மற்றும் உரங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய இறக்குமதிகளுக்காக அடுத்த ஆண்டு மற்றைய மூலங்களிலிருந்து 3 பில்லியன் டொலர்களை இலங்கை பெற வேண்டும்.

அதேநேரம் இலங்கையர்கள் தங்கள் பொருளாதார சூழ்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காண்பதற்கு சில மாதங்கள் ஆகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்