யாழ்ப்பாணத்தின் (Jaffna) மரபுரிமை சின்னமான மந்திரிமனையை பாதுகாக்கவும் அதனை புனரமைக்க அனுமதிக்குமாறும் வலியுறுத்தியும் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது.
நல்லூரில் அமைந்துள்ள மந்திரி மனையின் முன்பாக இன்று திங்கட்கிழமை காலை 8 மணிக்கு இந்தப் போராட்டம் நடைபெறும் என்று ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
அண்மையில் பெய்த மழையால் மந்திரி மனையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்த நிலையில் அந்த காணியின் உரிமையாளர் அதனை புனரமைக்க தடையாக செயல்பட்டு வருகிறார் என பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
அந்தவகையில், சங்கிலிய மன்னனது மந்திரிமனையை கடந்த 14 வருடங்களுக்கு மேலாக பாதுகாக்க நடவடிக்கை எடுத்தும் பயனளிக்கவில்லை என்றும் மந்திரிமனையை புனரமைக்க தாம் முயற்சித்த போதிலும் அதற்கு தனிநபர் தடையாக உள்ளதாக தொல்லியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள மந்திரிமனையை புனர்நிர்மாணம் செய்வதற்கு குறித்த காணியின் உரிமையாளரே தடையாக இருந்தார் என முன்னாள் யாழ் மாநகரசபை உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





