இலங்கைக்கு கடத்துவதற்காக ராமநாதபுரம் அருகே கடல் அட்டைகளை பதுக்கி வைத்திருந்த ஒருவர் கியூ பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் சக்கரக்கோட்டை நகராட்சி குப்பை கிடங்கு பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக கடல் அட்டைகள் பதப்படுத்தி வருவதாக கியூ பிரிவு ஆய்வாளர் ஜானகிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று இரவு (4) பொலிஸார் பகுதியில் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது நகராட்சி குப்பை கிடங்கு அருகே குடோன் அமைத்து அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை பதப் படுத்தி வந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
இதனை கண்ட கியூ பிரிவு பொலிஸார் கடல் அட்டைகளை பதப்படுத்திய கும்பலை மடக்கி பிடிப்பதற்காக சுற்றி வளைத்த நிலையில் தேவி பட்டினத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் அங்கிருந்த மூவர் தப்பி ஓடியுள்ளனர்.
இந்தநிலையில் அவரிடம் நடத்திய விசாரணையில் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை தேவிபட்டினத்தில் இருந்து வாங்கி வந்து சக்கர கோட்டை குப்பை கிடங்கு அருகே உள்ள குடோனில் பதப்படுத்தி பின்கடல் வழியாக இலங்கைக்கு கடத்த திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த குடோனில் இருந்த இந்திய மதிப்பில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான 250 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் கடல் அட்டைகளை பயன் படுத்தப்படும் பொருட்கள் உள்ளிட்டவற்றை கியூ பிரிவு பொலிஸார் பறிமுதல் செய்து ராமநாதபுரம் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
ராமநாதபுரம் புறநகர் பகுதியில் கடல் அட்டைகளை பதப்படுத்தி இலங்கைக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





