முருகனின் ஆவணி வளர்பிறை சஷ்டி வழிபாட்டு முறை!

வளர்பிறை சஷ்டி திதியன்று முருகனுக்கு விரதம் இருந்தோ அல்லது விரதம் இருக்காமலோ பக்தியுடன் குறிப்பிட்ட முறையில் விளக்கேற்றி வழிபட்டால் நம்முடைய வேண்டுதல்கள் நிச்சயம் நிறைவேறும்.

இந்த ஆண்டு ஆவணி மாத வளர்பிறை சஷ்டி ஆகஸ்ட் 29ம் தேதி, மங்களகரமான வெள்ளிக்கிழமை அன்று வருகிறது. வெள்ளிக்கிழமையில் வரும் சஷ்டி மிகவும் விசேஷமானது ஆகும். அதிலும் இன்றைய நாள் வரக் கூடிய வளர்பிறை சஷ்டி, முருகப் பெருமானுக்குரிய விசாகம் நட்சத்திரத்துடன் இணைந்து வருகிறது.

இது முருகனின் அருளை விரைவாக பெற்றுத் தரக் கூடியதாகும். அது மட்டுமல்ல சஷ்டி மற்றும் விசாகம் ஆகிய இரண்டிலும் விரதம் இருந்து இரட்டிப்பு பலனை தரக் கூடிய அற்புதமான நாளாகும்.

வழிபாட்டுமுறை

வளர்பிறை சஷ்டி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி, முருகப் பெருமானை வேண்டி விரதத்தை துவக்க வேண்டும். வீட்டில் முருகனின் சிலை அல்லது வேல் வைத்திருந்தால் அதற்கு பால், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீறு, தேன் போன்ற ஏதாவது 3 பொருட்களை பயன்படுத்தி அபிஷேகம் செய்து, முடிந்த நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும்.

அன்றைய தினம் அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று வழிபடலாம். வீட்டில் அபிஷேகம் செய்ய முடியாதவர்கள் கோவிலில் முருகனுக்கு நடைபெறும் அபிஷேகங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம்.

அதிகமான தடைகளை சந்திப்பவர்கள் வெற்றிலை தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு. கடன் பிரச்சனை தீர, சொந்த வீடு கட்ட நினைப்பவர்கள் வளர்பிறை சஷ்டியில் ஒரு தட்டில் துவரம் பருப்பை பரப்பி, அதன் மீது இரண்டு அகல் விளக்குகளில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி, பஞ்சு திரியிட்டு தீபம் ஏற்றலாம்.

இது தவிர வேறு ஏதாவது வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்றால் முருகனுக்கு மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபடலாம். வளர்பிறை சஷ்டி அன்று கந்தசஷ்டி கவசம், சுப்ரமணி புஜங்கள், திருப்புகழ், கந்தர் அலங்காரம், வேல்மாறல் போன்ற ஏதாவது ஒரு பாடலை பாராயணம் செய்வது சிறப்பு. இது எதுவும் முடியாதவர்கள், “ஓம் சரவண பவ” என்ற மந்திரத்தை 108 முறை சொல்லவோ, எழுதவோ செய்யலாம். இதுவும் அதிக பலன் தரக் கூடிய வழிபாடு ஆகும்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்