கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை கிணற்று நீரில் மலத்தொற்று இருப்பது ஆய்வில் கண்டயறிப்பட்டு தற்போது தொற்று நீக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வைத்தியசாலை வளாகத்தில் உள்ள கிணற்று நீர் வைத்தியசாலையின் அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
குடிநீருக்கும் இந்த பெறப்பட்டு வைத்தியசாலைக்குள் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் சுத்திகரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. ஏனைய தேவைகளும் நேரடியாக குறித்த கிணற்று நீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நீரில் ஒரு சில நாட்களுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் மலத்தொற்று (ஈகோலி) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மலத்தொற்றை நீக்கியாக குளோரின் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் வைத்தியசாலையில் கிணற்றில் காணப்படும் மலத்தொற்று கிருமிகளை நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தை பொறுத்தவரை நகரையும் நகரை அண்டிய பிரதேசங்களிலும் பெரும்பாலான கிணறுகளில் மலத்தொற்று காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வருடம் கிளிநொச்சி மாவட்டத்தின் நகரையும் நகரை அண்டிய பகுதிகளின் பொது கிணறுகள் உள்ளிட்ட சில கிணறுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி பல கிணறுகளில் மலத்தொற்று இருப்பது கண்டறியப்பட்டிருந்தது.
எனவே பொது மக்கள் கிணற்று நீரை குடிப்பதற்கு பயன்படுத்துகின்ற போது நன்கு சுட வைத்து பயன்படுத்த வேண்டும் அல்லது கிணற்றில் குளோரின் இட்டு தொற்று நீக்க வேண்டும் என சுதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
