இலங்கை பெற்றோருக்கு பிறந்த பெண்ணுக்கு இந்திய கடவுச்சீட்டு

தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஏதிலிகள் மறுவாழ்வு முகாமில் 1986ஆம் ஆண்டு இலங்கைத் தமிழ்ப் பெற்றோருக்குப் பிறந்த பெண்ணை, இந்திய பிரஜை என தீர்ப்பளித்த சென்னை மேல்நீதிமன்ற மதுரைக் கிளை, அவருக்கு கடவுச்சீட்டை வழங்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

தற்போது திருச்சி ஏதிலிகள் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் கே.நளினி என்ற பெண் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்ற இந்த தீர்ப்பை அளித்தது.

இலங்கையில் உள்நாட்டுப் போரின் விளிம்பில் இருந்தபோது, தனது பெற்றோர் இந்தியாவுக்கு வந்ததாக அவர் கூறினார்.

தான் 1986 ஏப்ரல் 21 இல் மண்டபம் முகாமில் பிறந்ததாகவும், தற்போது திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருப்பதாகவும் மனுதாரர் கூறியுள்ளார்.

வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைத்தமையால், அதற்காக இந்திய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்திருப்பதாகவும் கூறினார்.

எனினும், இந்திய கடவுச்சீட்டுக்கான விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டபோது, தமது குடியுரிமை குறித்து அதிகாரிகளுக்கு சந்தேகம் இருந்ததால், அது நிலுவையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்திய மண்ணில் பிறந்ததால், 1955 ஆம் ஆண்டின் இந்திய குடியுரிமைச் சட்டத்தின் 3 ஆவது பிரிவின்படி, தான் ஒரு இந்திய குடிமகன் என்பதை மனுதாரர் நளினி வலியுறுத்தியுள்ளார்.

1955 ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தின் பிரிவு 3 இன் படி, 1950 ஜனவரி 26 மற்றும் 1987 ஜூலை 1 க்கு இடையில் இந்தியாவில் பிறந்த ஒவ்வொருவரும் இந்தியக் குடிமகன் என்பதை நீதிபதி ஜீ.ஆர் சுவாமிநாதன் சுட்டிக்காட்டினார்.

இந்த வழக்கில், மனுதாரர் 1986 ஆம் ஆண்டு, மண்டபம் அகதிகள் முகாமில் உள்ள இலங்கை ஏதிலிகளுக்கு பிறந்தவராவார். தற்போது திருச்சி ஏதிலிகள் முகாமில் வசித்து வருகின்றார்.

சட்டத்தின் படி, அவர் ஒரு இந்திய குடிமகன். எனவே, அவர் கடவுச்சீட்டு பெற தகுதியானவர் என்று தீர்ப்பளித்த நீதிபதி, மனுதாரருக்கு கடவுச்சீட்டு வழங்க திருச்சி கடவுச்சீட்டு அதிகாரிக்கு உத்தரவிட்டார்.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்