கனடாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை மோசடி செய்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் இடைத்தரகரான தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது, பியகம காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இரண்டு நபர்களிடமிருந்து 5.5 லட்சம் ரூபாயை மோசடி செய்துள்ளதாக கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து, இந்த சந்தேக நபர் பியகம பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் பியகம பகுதியில் உள்ள ஒரு வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்துடன் இடைத்தரகராக இருந்து இந்தப் பண மோசடியைச் செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் பெப்ரவரியில் மாவனெல்ல பகுதியில் ஒரு நபரிடம் 300, 000 ரூபாயையும், மற்றொரு நபரிடம் 250,000 ரூபாயையும் மோசடி செய்துள்ளார்.
இவர் அரநாயக்க பகுதியில் சிறிது காலம் வசித்து வந்தபோது அவர்களிடமிருந்து இந்தப் பணத்தைப் பெற்று, பின்னர் திஸ்ஸமஹாராம பகுதிக்கு குடிபெயர்ந்துள்ளதாக காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட அறுபத்தைந்து வயதுடைய சந்தேக நபர்வர் மஹர நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.





