யாழ் காரைநகர் பகுதியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயாரான 36 வயதான பெண் ஒருவரது உடலம் சங்குப்பிட்டி பாலத்தினடியில் மீட்கப்பட்டது.
நேற்று முன்தினம் (12), மீட்கப்பட்டிருந்த குறித்த பெண்ணின் சடலம் தற்போது அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது.
அவரது சடலம் நேற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவன் முன்னிலையில் உடற்கூறாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இதன்போது, குறித்த பெண் படுகொலை செய்யப்பட்டுள்ள விடயம் தெரிய வந்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், பெண்ணின் தலையில் குத்தப்பட்டு, முகம் உள்ளிட்ட பகுதிகளில் எரியக்கூடிய திரவம் ஊற்றப்பட்டு எரிக்கப்பட்டு, கடலுக்குள் வீசப்பட்டுள்ளார் என தெரிய வந்துள்ளது.
அத்துடன், அவரது நுரையீரலில் நீர் புகுந்து, மூச்சுத்திணறலால் உயிரிழந்தமை உடற்கூறாய்வில் தெரிய வந்துள்ளது என கூறப்படுகின்றது.
அதேவேளை, குறித்த பெண் வீட்டை விட்டுப் வெளியேறிய போது, 10 பவுண் நகை அணிந்திருந்ததாகவும் இருப்பினும், அவரது உடலத்தில் நகைகள் காணப்பட்டிருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அவர் வீட்டை விட்டுப் புறப்பட்ட போது, தனது நண்பியுடன் வவுனியா செல்வதாகக் குறிப்பிட்டுள்ள நிலையில், எனினும், இதுவரையான விசாரணையில் வெளியான தகவலின்படி, அந்த பெண் குறிப்பிட்டவர்களுடன் சென்றிருக்கவில்லை என்பது விசாரணையில் அறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், வெகுவிரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.





