பதகளிப்புக்கும் மத்தியில் முடங்கிக் கிடக்கும் இலங்கை

எம்.ஆர். நாராயண் சுவாமி

முன்னர் விநியோகித்திருந்தமைக்கு பணம் செலுத்தாததால் , வழமையான விற்பனையாளர்கள்வழங்குவதற்குவிரும்பாததாலும் கொழும்புக்கு அந்நியச் செலாவணி கிடைக்காததால் , வரக்கூடிய வற்றை வாங்க முடியாமல் போனதாலும், பெற்றோல் மற்றும் டீசல் கிட்டத்தட்ட தீர்ந்துபோய் விட்டது.

நாட்டில் இன்னும் எவ்வளவு இருந்தாலும் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே கிடைக்கிறது, கிட்டத்தட்ட 22 மில்லியன் மக்கள் வசிக்கும் தேசத்தை இது முடக்குவதுடன் வாகனங்கள் பெரும்பாலும் நிறைந்த வீதிகளை வெறுமையாக்குகிறது.

முக்கியமான ஊழியர்களைத் தவிர, அநேகமாக அரசாங்கம் அதன் அனைத்து அலுவலகங்களையும் மூடியுள்ளது. தனியார் மற்றும் அரச துறை ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. ஊழியர்கள் வேலை செய்யத் தவறியதால் பல ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. அனைத்துக்கும் எரிபொருள் பற்றாக்குறையே காரணமாகும் .

இதே காரணத்திற்காக, தபால் நிலையங்கள் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே திறந்திருக்கும்.

டீசல் இல்லாமல் விநியோக வேன்கள் இயங்க முடியாது என்பதால், கொழும்பிலும் அதைச் சுற்றியுள்ள முக்கிய பல்பொருள் அங்காடிகள் புதிதாக பொருட் களைப் பெற்றுக்கொள்வதை நிறுத்தியுள்ளன, இதனால் பெரும்பாலான மக்களுக்கு உணவு கிடைப்பது கடினமாக உள்ளது. சுற்றுவட்டாரத்தில் உள்ள பல பலசரக்கு கடைகளும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

பல மாதங்களாக, ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் எரிபொருளுக்காக நீண்ட நேரம், சில தருணங்களில் முழு பகல் இரவுகளையும் கூட பாம்பு போன்ற வரிசையில் செலவிட்டுள்ளனர். பலர் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளனர். விசனம் சுவாலையிட்டது. கடுமையான சோர்வு தவிர மோதல்களும் காணப்படுகின்றன.
சுட்டெரிக்கும் வெயிலில் வரிசையில் நிற்கும் போது அல்லது வீடு திரும்பிய பிறகு மன அழுத்தத்தை சமாளிக்க முடியாமல் நாட்டில் குறைந்தது 17 பேர் இறந்துள்ளனர்.
இந்தச் சித்திரவதையெல்லாம் போதாதென்று, உணவுப் பொருட்களின் விலைகள் எந்தவொரு இரக்கமும் இன்றி உயர்ந்து கொண்டே செல்கின்றன. இதனால் வறிய மக்கள் ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவையாவது கைவிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். நிலையான வருமானம் உள்ளவர்கள் கூட, தங்களுடைய பணத்தின் பெறுமதி ஒரே மாதிரியாக இல்லை என்பதை உணர்கின்றனர்.

மார்ச் மாதத்தில் இலங்கை ரூபாவின் பெறுமதி 80 வீதத்துக்கும் அதிகமான மதிப்பை இழந்துள்ளது. அதிக பணவீக்கம் நாட்டை வாட்டி வதைத்துள்ள நிலையில், அடிப்படை வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்வதற்காக அடுத்த ஆறு மாதங்களில் கொழும்புக்கு 5 பில்லியன் டொலர் தேவைப்படுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இதில் எரிபொருள் வாங்க 2.3 பில்லியன் டொலர், உணவு இறக்குமதி செய்ய 900 மில்லியன் டொலர், சமையல் எரிவாயு பெற 250 மில்லியன்டொலர், உரத்துக்கு 600 மில்லியன் டொலர்.

சமையல் காஸ் வாங்கவோ, வாங்க முடியாமலோ நகர்ப்புறங்களில் உள்ள ஏராளமான குடும்பங்கள் சமையல் செய்ய விறகுகளை நாடியுள்ளன. மின்சாரம் இருந்தால் மட்டுமே மின்சார அடுப்புகளைப் பயன்படுத்த முடியும். போதிய எரிபொருள் இல்லாததால் மீண்டும் பல மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படுகிறது.
நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் விலையுயர்ந்த மருத்துவ உபகரணங்களுக்கான மருந்துகள் மற்றும் உதிரிப்பாகங்கள் தீர்ந்துவிட்டன.

அரசாங்கமும் இறக்குமதி செய்ய முடியாது. மூலப்பொருட்கள் பற்றாக்குறையால் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன அல்லது மூடப்படும் நிலையில் உள்ளன.

“எங்களுக்கு ஒரு பயங்கரமான நிலைமை உள்ளது. இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் பஞ்சம் போன்ற சூழ்நிலையை நாங்கள் எதிர்கொள்ள நேரிடும்” என்று பொருளாதார நிபுணர் அகி லன் கதிர்காமர் இலங்கையிலிருந்து தொலைபேசி மூலமான பேட்டியின்போது கூறியுள்ளார். “ஏற்கனவே, கடுமையான தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளன. அதே நேரத்தில் விலைகள் மிக அதிகமாக உள்ளன.” எனவும் அவர் கூறியுள்ளார்.

நிலைமை மிகவும் மோசமாக இருப்பதை அரசாங்கத்தின் சிரேஷ்ட வட்டாரம் ஏற்றுக் கொண்டது.

“பொருளாதாரம் வீழ்ச்சியின் விளிம்பில் உள்ளது” என்று அவர் கொழும்பிலிருந்து எச்சரிக்கையுடன் கதைத்தார். தன்னை அடையாளம் காட்டிக்கொள்ள அவர் விரும்பவில்லை. “இடம்பெறவிருக்கும் அறுவடையில் 60 சதவீத வீழ்ச்சி ஏற்படும், நாங்கள் கடுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்கிறோம்.”
இருப்பினும், “கிராமப்புற மக்கள் வீட்டுத் தோட்டங்களிலிருந்து காய்கறிகள் மற்றும் பழங்களைக் கொண்டிருப்பதால்” பட்டினியால் வாட மாட்டார்கள் என்று அவர் கருதுகிறார். ஆனால் சகலரும் அதனை ஏற்றுக்கொள்வதில்லை.

வரவிருக்கும் உணவு நெருக்கடி பற்றி எச்சரித்த பின்னர், அதிகாரிகள் இலங்கையர்களை வீட்டுத் தோட்டச் செய்கையில் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்கிறார்கள். மேலும் அரசாங்கத்தின் வசம் உள்ள தரிசு நிலத்தைக் கூட காய்கறிகள் பயிரிடுவதற்கு அனுமதித்துள்ளனர்.

“இந்த நெருக்கடி விரைவில் நீங்காது. இது குறைந்தது ஆறு மாதங்கள் நீடிக்கும், இல்லை என்றால் பொருளாதாரத்தை மீண்டும் தடத்தில் கொண்டு வர இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் ஆகும்.” என்று பெயர் குறிப்பிட விரும்பாத மற்றொரு அதிகாரி கூறியுள்ளார்.

தாங்கள் நரகத்தில் வாழ்வதாக கொழும்புவாசிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
“என்ன நடக்கிறது என்பதை என்னால் நம்ப முடியவில்லை,” என்று தலைநகரில் ஓர் ஆடம்பரமான பகுதியில் வசிக்கும் ஓய்வு பெற்ற றொஹான் குணவர்தன கூறினார். “(உள்நாட்டு) யுத்தத்தின் போது வடக்கு மற்றும் கிழக்கில் ஏற்பட்ட பற்றாக்குறைகள் பற்றி நாங்கள் படித்திருந்தோம். இப்போது இலங்கையில் எல்லா இடங்களிலும் இதுதான் நடக்கிறது.

இலங்கை தனது சர்வதேச கடன் கொடுப்பனவுகளுக்கு மதிப்பளிக்கத் தவறியமை, பாதிப்பு மிகவும் ஆழமாக உள்ளது என்பதற்கான தெளிவான அறிகுறியாகும். அப்போதிருந்து, அண்டை நாடான இந்தியா, இலங்கையின் பொருளாதாரத்தை நிலைநிறுத்துவதற்கு அதிகபட்சமாகச் செய்துள்ளது. பங்களாதேஷ், ஜப்பான், சீனா, ஈரான், அமெரிக்கா மற்றும் சர்வதேச அமைப்புகளில் இருந்தும் உதவிகள் வந்துள்ளன. ஆனால், வழங்கப்பட்டவை எவ்வளவுக்கு தாராளமாக இருந்தாலும், இலங்கையை ஸ்திரத்தன்மையுடன் வைத்திருக்க முடியாது.

இலங்கையை முன்னர் தட்டிக் கேட்க மறுத்த சர்வதேச நாணய நிதியம் உதவிப் பொதியைப் பெற ஊழலைக் கட்டுப்படுத்துவதோடு, பெருமளவு வரி மற்றும் அபிவிருத்தி சார்ந்த சீர்திருத்தங்களை மேற்கொள்ளுமாறு கொழும்பிடம் கூறியுள்ளது.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கடந்த வாரம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் அவசரமாக தொடர்புகொண்டு எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகத்தைக் கோரினார். அவரது அமைச்சரவை சகாக்கள் உதவிக்காக உலகம் முழுவதும் தேடி வருகின்றனர்.

இலங்கை சமீபத்தில் அணுகியுள்ள நாடு எண்ணெய் வளம் மிக்க கட்டாராகும்.இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை புலனாய்வு அமைப்புகள் டோஹாவிலிருந்து அறக்கட்டளையொன்றின் தொண்டு சேவை பணிகளுக்காக நிதி பெறும் ஒரு முஸ்லிம் ஆர்வலரை சிறையில் அடைக்க விரும்பியபோது கட்டார் அறக்கட்டளையின் மீது இரண்டாண்டுகளுக்கு முன்பு தடை விதிக்கப்பட்டது.ஆனால் அறக்கட்டளையின் மீதான தடையை நீக்கியதன் மூலம் அது தவறை ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.

கொழும்பில் வசிக்கும் குணவர்தன என்பவர் : “உத்தியோகபூர்வமாக, இலங்கை இப்போது வங்குரோத்தாகியுள்ளது. அரசாங்கத்திடம் பணம் இல்லை என்று பிரதமர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். உணவு, எரிபொருள் மற்றும் மருந்து பற்றாக்குறையை விட இது மிகவும் கடுமையானது.

2009 இல் யுத்தம் முடிவடைந்த இலங்கையின் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களிலும், மனித உரிமை மீறல்களுக்கு எதிராக கோபம் நீடித்திருப்பதிலும் பார்க்க இந்த நிலைமை வேறுபட்டதல்ல”என்று கூறியுள்ளார்.

ஆனால் அங்கு வசிப்பவர்கள் கொழும்பிலும்,சிங்களவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பிராந்தியங்களிலும் அரசாங்கத்துக்கு எதிராக நடைபெறும் முடிவில்லாத போராட்டங்களுக்கு தங்கள் ஆதரவை வழங்கவில்லை – இது இனப் பிளவு நீங்கவில்லை என்பதற்கான அறிகுறியாகும்.

இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் நாட்டின் மிகப் பெரிய இடதுசாரிக் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுன ஆகியவை நாட்டின் உக்கிரமடைந்து வரும் பொருளாதார துயரங்களைத் தீர்த்து வைப்பதற்கு அவர்களால் இயலாது என்று கூறி, ஜனாதிபதியையும் பிரதமரையும் இராஜினாமா செய்ய வற்புறுத்தும் போராட்டங்களுக்குத் தயாராகி வருகின்றன.

பிரதமர் விக்கிரமசிங்கவுக்கு முன்னர் பிரதமராக விளங்கியவரும் தற்போதைய ஜனாதிபதியின் சகோதரருமான பலம் வாய்ந்த மஹிந்த ராஜபக்ச, ஆளும் கட்சி குண்டர்களின் வன்முறையை அடுத்தும், அரசாங்கத் தலைவர்கள் மற்றும் அவர்களது சொத்துக்கள் பலவற்றில் தாக்கப்பட்ட பயங்கரமான எதிர் வன்முறையை அடுத்தும் மே 9 அன்று அவசரமாக வெளியேறி இராணுவ முகாமில் தஞ்சமடைந்தார். இதைத் தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.

பெரும்பாலான இலங்கையர்கள் ராஜபக்ஷ குலத்தையும் பொதுவாக அரசியல்வாதிகளையும் அரச பணத்தைப் பறித்ததற்காகவும், இப்போது வெள்ளை யானைகளாகக் கருதப்படும் உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்குவதற்காகவும், விவசாயத்தை நாசப்படுத்தும் இறக்குமதி உரங்களுக்குத் தடை விதித்ததற்காகவும், அதிகாரத்தை விட்டுக்கொடுக்க மறுப்பதற்காகவும் குற்றம் சாட்டுகிறார்கள். கொவிட்-19 மற்றும் 2019 இல் தேவாலயங்கள் மீது குண்டுவெடிப்புகள் பணம் சுழலும் சுற்றுலாத் துறையை முடக்கியது, இது முதலாவது பெரிய அடியாக இருந்தது.

ஜனாதிபதியும் பிரதமரும் செல்ல வேண்டும் என்று பொருளாதார நிபுணர் கதிர்காமர் நம்புகிறார்.

“இந்த அரசாங்கம் மக்களை நெருக்கடியிலிருந்து விடுவிப்பதற்கான நியாயத்தை இழந்துவிட்டது. மக்களை வழி நடத்தும் புதிய தலைமை தேவை” என்று அவர் கூறியுள்ளார்.
தற்போதைய குழப்பத்துக்கு வழிவகுத்த தவறுகளை ஒப்புக்கொண்ட பின்னரும் தாம் பதவி விலகப் போவதில்லை என ஜனாதிபதி அறிவித்துள்ளதால், எதிர்வரும் காலங்களில் இலங்கையில் மேலும் அரசியல் கொந்தளிப்பை எதிர்பார்க்கலாம்.

டிப்ளோமற்

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்