இலங்கையின் வெளிநாட்டு நாணய இருப்பு 50 மில்லியன் அமெரிக்க டொலர்களாக வீழ்ச்சி

இலங்கை கொண்டுள்ள வெளிநாட்டு நாணயத்தில், தற்பொழுது பயன்படுத்தக்கூடிய தொகை 50 மில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைவடைந்திருப்பதாக நிதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி இன்று (04) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நிதி அமைச்சர் தலைமையிலான அதிகாரிகள் குழு சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்திய பேச்சு வார்த்தைகள் தொடர்பாக நிதி அமைச்சர் இன்று (04) பாராளுமன்றத்தில் விளக்கமளிக்கும் பொழுதே இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் தொடர்பான நிகழ்ச்சி நிரலை தொடர்வதற்கு மேலும் சுமார் 6 மாத காலம் செல்லக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

வருமான வரியை அதிகரிக்க கூடிய புதிய வரவு செலவு திட்டமொன்றை சமர்பிக்க எதிர்பார்த்திருப்பதாக அமைச்சர் கூறினார்.

2021 ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்திற்கு அமைய செயற்படுவது சிரமம் என்பதினாலேயே புதிய வரவு செலவுத்திட்டத்தை சமர்பிக்க எதிர்பார்த்திருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தற்பொழுது பொருளாதார நெருக்கடி மேலும் 2 வருட காலம் நீடிக்க கூடும் .

2 வருட காலத்திற்குள் தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வை காண முடியுமா? என்பது தொடர்பில் சிந்திக்க முடியாது. இரண்டு வருட காலத்திற்குள் தீர்க்க முடியுமா? அல்லது 10 – 11 வருடங்களில் தீருமா? என்பது தொடர்பில் தீர்வு நமது கையிலேயே உண்டு என்று சுட்டிக்காட்டிய அமைச்சர், வரி அதிகரிக்கப்பட வேண்டிய காலத்தில் நாம் வரியை குறைத்தோம். இது வரலாற்று தவறாகும் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

கொடுக்க வேண்டியவற்றுக்கு பதிலாக வேறோன்று வழங்கப்பட்டது. அதன் பிரதிபலனையே நாம் இன்று அனுபவிக்கிறோம். கடந்த 2 வருட காலப்பகுதியில் 8 பில்லியன் கடன் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த வருடமளவில் சுற்றுலா பயணிகளின் மூலமான வருமானம் 2 மில்லியனாக குறைவடைந்தது. இதன் காரணமாக பல்வேறு பிரச்சினைகளை நாம் எதிர்க்கொண்டோம். இதனை தொடர்ந்து சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்ல வேண்டி ஏற்பட்டது. அனைத்து அரசாங்கங்களும் தெளிவற்ற பொருளாதார சிந்தனையுடன் செயல்பட்டுள்ளன. இதனாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

2021ஆம் ஆண்டு நாட்டின் மொத்த வருமானம் 1500 பில்லியன் ரூபா, செலவு 3522 பில்லியன் ரூபாவாக இருந்தது. அரசாங்கத்தின் செலவினங்களில், 2,748 பில்லியன் மீண்டுவந்த செலவாகும், இதில் 825 பில்லியன் ரூபா சம்பளம், ஓய்வூதியம், ஊனமுற்ற வீரர்கள், பாடசாலை சீருடைகள் மற்றும் பாடப்புத்தகங்களுக்காக செலவிடப்பட்டது.

1981 ஆம் ஆண்டு தொடக்கம் அரசாங்கத்தின் தேசிய வருமானத்தின் வருமான வரி 24 – 23 வீதமாக இருந்தது. இது தற்பொழுது குறைவடைந்தது. அதாவது 2021 ஆம் ஆண்டளவில் 8.6 சதவீதமாக குறைவடைந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தற்பொழுது அரசாங்கத்தினால் செலுத்த வேண்டிய மொத்த வெளிநாட்டு கடன் 51 பில்லியனாகும். கடந்த 2 வருடங்களில் அரசாங்கம் கடன் பெறாது 8 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடன் தவணையாகவும், கடனுக்கான வட்டியாகவும் செலுத்தியிருப்பதாக நிதி அமைச்சர் கூறினார்.

சர்வதேச நாணய நிதியம் கூறினாலும் கூறாவிட்டாலும் இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு தீர்மானங்கள் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். இவ்வாறில்லாத பட்சத்தில் எப்பொழுதும் விநியோக பொருளாதாரத்தில் தங்கியிருந்து கடனை பெற்று வாழ வேண்டிய நிலை ஏற்படும்.

தற்பொழுது இலங்கை எரிபொருள், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பெற்றுக் கொள்வதற்காக ,ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி மற்றும் இந்தியாவிடம் இருந்து கடன் உதவியை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டு இருப்பதாக அமைச்சர் கூறினார்.

நாட்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கான முறையொன்றை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.

நான் பொருளாதார நிபுணர் அல்ல. யாராவது பொருளாதார நிபுணர்கள் இருப்பார்களாயின், அவர்கள் இதனை பொறுப்பேற்க வேண்டும் என்றும் நிதியமைச்சர் அலிசப்ரி தனது உரையில் மேலும் தெரிவித்தார்.


🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com


⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!


🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com


🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்