பிரித்தானிய அரசாங்கம், அகதி அந்தஸ்து (asylum) பெற்றவர்களின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை விரிவுபடுத்தும் நோக்கில் “Protection Work and Study Route” எனும் புதிய விசா முறையை அறிமுகப்படுத்த உள்ளது.
இந்த திட்டம் மூலம் அகதி அந்தஸ்து பெற்றவர்கள், பிரித்தானிய பல்கலைக்கழகங்களில் மேல்படிப்பில் சேரவும், வேலை சந்தையில் பங்கேற்கவும் தனிப்பட்ட அனுமதியை பெறுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
அரசு அறிவிப்பின் படி, அகதி அந்தஸ்து வழங்கப்படும் நபர்களுக்கு முதலாவதாக “core protection” என்ற அடிப்படை குறுகிய கால தங்குமிட அனுமதி வழங்கப்படும்.
எனினும், அவர்கள் கல்வி அல்லது வேலை வாயிலாக தொடர்புடைய புதிய விசாவுக்கு மாறும் போது, பிரித்தானியாவில் நிரந்தர குடியுரிமையை விரைவாகப் பெறும் வாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது.
இந்த திட்டத்தில், அகதிகள் பல்கலைக்கழகங்களில் தங்களுக்கேற்ற பொருத்தமான படிப்பில் சேர வேண்டும் அல்லது வேலையை பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, அதற்கான கட்டணத்தை செலுத்தும் திறன் கட்டாயமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கொள்கையில் முதற்கட்ட பாதுகாப்பு(core protection) வழங்கப்படும் நபர்களுக்கு குடும்பத்தை அழைத்துவரும் உரிமை இருக்காது.
ஆனால் Work & Study விசாவை பெற்ற பிறகு, பிற குடியேற்ற வகைகளைப் போல குடும்ப அழைத்துவர விண்ணப்பிக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த மாற்றம், அகதிகளை பிரித்தானிய சமூகத்தில் கல்வி மற்றும் வேலை வாயிலாக விரைவாக ஒருங்கிணைக்க அரசு நோக்குவதாகவும், மாணவர் விசாவை பயன்படுத்தி அதிக அளவில் அகதி அந்தஸ்து கோரப்படும் தற்போதைய நிலையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.
எவ்வாறாயினும், இந்த கொள்கைக்கு நிதி திறன், கல்வித் தகுதி, மற்றும் வரையறுக்கப்பட்ட இடங்களின் சவால் காரணமாக, பல அகதிகள் பயன்பெற முடியாது என பல்வேறு அகதிகள் அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





