சில அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சிப்பதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னாள் அரசியல்வாதிகளும் அவர்களது நெருங்கிய உறவினர்களும் இவ்வாறு இரகசியமாக வெளிநாடு செல்ல முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
புலனாய்வுப் பிரிவு தகவல்களின் அடிப்படையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. எனவே இந்த முயற்சியை தடுத்து நிறுத்தும் நோக்கில் பாதுகாப்பு தரப்பினருக்கு விசேட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இவர்கள் பல்வேறு ஊழல் மோசடிகள் தொடர்பிலான விசாரணைகளுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்படாதவர்கள் வெளிநாடு செல்ல எவ்வித தடையும் கிடையாது என தெரிவிக்கப்படுகின்றது.
வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டவர்கள் கடல் மார்க்கமாக தப்பிச் செல்ல முயற்சிப்பதாக புலனாய்வுத் தகவல்களை மேற்கோள்காட்டி குறித்த தெற்கு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அண்மைய நாட்களாக கடந்த அரசாங்கங்களின் முக்கியஸ்தர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எனினும் இந்த விபரங்கள் தொடர்பில் காவல்துறையினரோ அல்லது அரசாங்கமோ அதிகாரபூர்வ தகவல்கள் எதனையும் வெளியிடவில்லை.