புதிய அரசமைப்பு ஊடாக தமிழர்களுக்குரிய அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காக போராடுவோம். சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை பெறுவதற்காகவே தமிழ் மக்கள் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு ஆணை வழங்கிவருகின்றனர் என்று அக்கடசியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“ பொறுப்புகூறல், காணி விடுவிப்பு உள்ளிட்ட விடயங்களில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்குரிய அழுத்தங்களை பிரயோகிப்பதற்கு எமது மக்கள் ஆணை வழங்கியுள்ளனர். காணி விடுவிப்பில் ஓரளவு முன்னேற்றம் இருந்தாலும் மேலும் செய்ய வேண்டியுள்ளது.
தமது அரசியல் அபிலாசைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும், அதற்காக சமஷ்டி அடிப்படையிலான தீர்வு அவசியம். இதனை பெறும் நோக்கிலேயே தமிழரசுக் கட்சிக்கு தமிழ் மக்கள் ஆணை வழங்கிவருகின்றனர்.
இது கார்த்திகை மாதம், வடக்கு, கிழக்கில் எமது விடு தலைக்காக போராடிய வீரமறவர்களை நினைவுகூரும் மாதம். ஆயிரக்கணக்கான போராளிகள் இனத்தின் விடுதலைக்காக இம் மண்ணில் விதைக்கப்பட்டனர். அவர்களை நினைவு கூரும் மாதம்.
எனவே, பாலமொன்றை பெறுவதற்காக எமது ஆயிரக்கணக்கான மக்கள் உயிர் தியாகம் செய்யவில்லை. ஒரு பொறுப்புள்ள கட்சி என்ற அடிப்படையில் தமிழ் மக்களின் எதிர்காலம் பற்றி சிந்தித்து முடிவெடுக்க கூடிய உரிமை எமது கட்சிக்கு உள்ளது.
தமிழ் மக்களின் உரிமைக்கானது எமது கட்சி. ஜனாதிபதிமீது எமக்கு இன்னும் நம்பிக்கை உள்ளது.” எனவும் சாணக்கியன் எம்.பி. குறிப்பிட்டார்.





