இலங்கை கடலில் அத்துமீறி 123 இந்திய படகுகள் குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை!

இலங்கை கடலில் அத்துமீறி உள்நுழைந்த குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 123 இந்திய ரோலர் படகுகளை அறிவித்தல் கிடைத்ததும் கடலில் புதைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கடற்தொழில் நீதியியல் வள திணைக்கள யாழ் மாவட்ட உதவி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்றைய தினம்(30.05.2025) இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலின் கடற்தொழில் விடயதானங்களின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ”சுமார் 3 தொடக்கம் 4 வருடங்களாக யாழ். மயிலிட்டி துறைமுகத்தில் இந்திய அத்து மீறிய ரோலர் படகுகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

இந்தப் படகுகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் எமது உள்ளூர் கடற்தொழிலாளர்கள் தமது படகுகளை கட்டுவதில் பாரிய இடர்பாடுகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

இதன் காரணமாக குறித்த படகுகளை கடலில் புதைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் கடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய உபகரணங்களை குறித்த ரோலர் படகுகளிலிருந்து அகற்றும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகிறன.

பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைத்ததும் கடலில் புதைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.”என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சிறப்புச் செய்திகள்