இலங்கையில் 6 கோடி ரூபா பணத்துடன் சினிமா பாணியில் வேனை கடத்திய சாரதி

ஹட்டன் நகரில் அமைந்துள்ள தனியார் வங்கியொன்றின் ஏ.ரி.எம் இயந்திரத்துக்கு நிரப்புவதற்காக எடுத்துச் செல்லப்பட்ட சுமார் 6 கோடி ரூபா பணத்தை கொள்ளையிட்டுத் தப்பிச்சென்ற சந்தேகநபர் ஒருவர் காவல்துறை விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர்.

பணத்தை மீள் நிரப்புவதற்காக எடுத்துச்சென்ற, தனியார் பாதுகாப்புசேவை நிறுவனம் ஒன்றின் சிற்றுந்து சாரதியே குறித்த பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

ஏ.ரி.எம் இயந்திரத்துக்கு மீள் நிரப்புவதற்காக, கண்டியிலிருந்து வங்கி அதிகாரியொருவர், பாதுகாப்பு அதிகாரி மற்றும் சாரதி ஆகியோர் பணத்துடன் ஹட்டன் நகருக்கு சிற்றுந்து ஒன்றில் பயணித்துள்ளனர்.

அதன்போது, ஏ.ரி.எம் இயந்திரத்துக்கு பணத்தை நிரப்புவதற்கு வங்கி அதிகாரி மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் சிற்றுந்திலிருந்து கீழே இறங்கிய வேளையில், சந்தேகநபரான சாரதி பணத்துடன் சிற்றுந்தினை செலுத்தித் தப்பிச்சென்றுள்ளார்.

இதனையடுத்து, நிறுவனத்தின் அதிகாரியும், பாதுகாப்பு ஊழியரும் அவரை பின்தொடர்ந்துள்ளனர்.

அதன்போது, தலவாக்கலை – லிந்துலை வழியாக அம்பேவளை பகுதிக்கு சிற்றுந்து செல்வதை, தொழில்நுட்ப உதவியுடன் கண்டறிந்துள்ளனர்.

பின்னர். இது தொடர்பில் காவல்துறை மற்றும் விசேட அதிரடி படையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் ரேந்தபொல பகுதியில் வைத்து விசேட அதிரடிப்படையின் மீபிலிமான முகாம் அதிகாரிகள் குறித்த சிற்றுந்தினை மடக்கிப் பிடித்து, சந்தேகநபரான சாரதியை கைது செய்துள்ளனர்.

பின்னர் குறித்த பணத்தொகை மற்றும் சிற்றுந்துடன் சந்தேகநபரான சாரதி, கெப்பட்டிப்பொல காவல் நிலையத்தில் வைத்து ஹட்டன் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

சந்தேக நபரை இன்று (02) ஹட்டன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.