உறவினர்களிற்குள் ஏற்பட்ட சொத்து தகராறு முற்றி, சுவிற்சர்லாந்தில் இருக்கும் உறவினர் ஒருவரால் ஏவி விடப்பட்டு, வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்ட கூலிப்படையினர் இருவரை யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கடந்த 19 ஆம் திகதி உடுவில் அம்பலவாணர் வீதியில் உள்ள வீடொன்றிற்குள் நுழைந்த கும்பல் வீட்டிலிருந்த பெறுமதியான பொருள்களை அடித்து சேதப்படுத்தியது. வீட்டில் பெற்றோல் ஊற்றி கொளுத்த முற்பட்டது. ஆனால் அது வெற்றியளிக்கவில்லை.
70 வயதான முதியவர் ஒருவர் தனித்திருந்த வீடு அது.
தனது சகோதரர் முறையான ஒருவருடன் இணைந்து வீட்டை வாங்கியதாகவும், வீட்டை தன்னிடம் ஒப்படைக்கும்படி அவர் வற்புறுத்தி வருவதால், அவருடன் தகராறு ஏற்பட்டதாகவும், அவர்களின் ஏற்பாட்டில் இந்த தாக்குதல் நடந்திருக்கலாமென்றும் சந்தேகம் தெரிவித்திருந்தார்.
சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு அண்மையாகக் காணப்பட்ட சிசிரிவி காட்சிகளை பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் ஆராய்ந்தனர்.
அதனடிப்படையில் மானிப்பாய் பகுதியில் சந்தேக நபர்கள் இருவர் இன்று கைது செய்யப்பட்டனர்.
அவர் சம்பவத்தின் போது பயன்படுத்திய வெகோ மோட்டார் சைக்கிள் மற்றும் வாள் ஒன்றினையும் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கைப்பற்றினர்.
காணிப் பிரச்சினை ஒன்றில் அயல் வீட்டுகாரருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக ஆரம்ப விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.
சுவிற்சர்லாந்திலுள்ள பெண்ணொருவரே, மானிப்பாயை சேர்ந்த ஒருவருக்கு 3 இலட்சம் ரூபாய் பணம் கொடுத்து அந்த வீட்டிற்கு பெற்றோல் குண்டு அடித்து வீட்டையும் அடித்துச் சேதப்படுத்தி அச்சுறுத்தல் விடுக்குமாறு கேட்டுள்ளதாக, கைதாகவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
அதன் காரணமாக மானிப்பாயை சேர்ந்த இளைஞன் ஒருவருக்கு பணம் வந்து அவர் தன்னுடன் உள்ள இளைஞர்களை கூட்டி சென்று தாக்குதலை மேற்கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவர் உள்ளனர். அவர்களையும் கைது செய்ய யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.
சந்தேக நபர்கள் விசாரணையின் பின்னர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.
தாரணி சூப்பர்மார்கெட் யாழில் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! tharanysupermarket.com