கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் உணவுப் பணவீக்கம், செப்டம்பர் மாதத்தில் 10 சதவீதத்திலிருந்து இந்த மாதம் 12.8 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், உணவல்லாப் பணவீக்கம் கடந்த செப்டம்பர் மாதத்தில் 3.8 சதவீதத்திலிருந்து இந்த மாதம் 5.4 சதவீதமாக அதிகரித்துள்ளது.
உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள பொருட்களில் அவதானிக்கப்பட்ட விலை அதிகரிப்பு காரணமாகக் கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாதாந்த மாற்றம் இந்த மாதம் 1.94 சதவீதத்தினைப் பதிவு செய்துள்ளது.
மேலும், உணவு மற்றும் உணவல்லா வகைகளின் மாதாந்த மாற்றங்கள், முறையே 0.91 சதவீதத்தினையும் 1.03 சதவீதத்தினையும் பதிவு செய்தன.
இதற்கமைய, உணவு வகையினுள் அரிசி, பால்மா, தேங்காய் என்பவற்றின் விலைகள் அதிகரித்துள்ளன.
மேலும், வீடமைப்பு, நீர், மின்சாரம், எரிவாயு மற்றும் ஏனைய எரிபொருட்கள், உணவகங்கள், விடுதிகள் போன்ற துணைவகைகளில் அவதானிக்கப்பட்ட விலை அதிகரிப்பின் காரணமாக உணவல்லா வகையிலுள்ள பொருட்களின் விலைகளில் அதிகரிப்புக்கள் பதிவாகின.