சந்தையில் சீமெந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையால், கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளோர் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்நிலையில் அடுத்த மூன்று வாரங்களுக்குள், சந்தைக்கு தேவையான சீமெந்தை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளதாக, நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன குறிப்பிட்டுள்ளார்.
சீமெந்து இறக்குமதியாளர்களுடன் நேற்று(28) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சந்தையில் தற்போது சீமெந்து ஒரு மூடையின் விலை 1,400 ரூபா வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
தற்போது நாட்டில் நிலவும் டொலர் தட்டுப்பாடு காரணமாக சீமெந்து இறக்குமதி நிறுவனங்களுக்கு, வங்கிகளில் கடன் விடுவிப்பு ஆவணத்தைப் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலையே, சீமெந்து தட்டுப்பாட்டுக்கு காரணமாகத் தெரிவிக்கப்படுகிறது.