டுபாயில் தற்போது நடைபெற்றுவரும் சர்வதேச ‘எக்ஸ்போ 2020’ நிகழ்வில் உள்ள இலங்கை காட்சியகம், பல்வேறு தரப்பினரால் கவரப்பட்டுள்ளதாகச் சுற்றுலாத்துறையின் தலைவர் கிமாலி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கடந்த 20 நாட்களில் பல நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரம் பேர் இலங்கை காட்சியகத்திற்கு வருகை தந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இலங்கையின் பாரம்பரிய பொருட்கள் சகலரையும் கவர்ந்துள்ளதுடன் பத்திக், களிமண் மட்பாண்டங்கள், மர வேலைப்பாடுகள், சிற்ப கைவினைகள் உட்பட பல பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது தவிர ‘சிலோன் தேயிலை’ விசேட கருமபீடத்தில் பல நாடுகளைச் சேர்ந்த இறக்குமதியாளர்கள் பல்வேறு விடயங்களைக் கேட்டு அறிந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.
இந்த சர்வதேச கண்காட்சியினூடாக இலங்கையின் ஏற்றுமதி மற்றும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் எனச் சுற்றுலாத்துறையின் தலைவர் கிமாலி பெர்னாண்டோ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.